சென்னை: இன்று சென்னையில் நடந்த குடியரசு நாள் விழா அணிவகுப்பில் பங்குபெற்ற ஊர்திகளின் விவரங்கள்….
1-வது அலங்கார ஊர்தியாக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள ஊர்தி வலம் வந்தது.
அதில், தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி குழுவினரின் நாதஸ்வரம், தவில், வீணையுடன் கூடிய மங்கள இசை இடம் பெற்றது.

2-வது அலங்கார ஊர்தியில்,
வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியோரது சிலைகளுடன் வேலூர் கோட்டை, காளையார்கோவில் கோபுரம் ஆகியவை இடம் பெற்றன.

3-வது அலங்கார ஊர்தியில்,
சுதந்திரத்துக்காக பாடுபட்ட வ.உ.சி. செக்கு இழுக்கும் நிகழ்வு, பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி மற்றும் அவருடன் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களை காட்சிப்படுத்தும் தத்ரூப சிலைகளுடன் சுதேசி கப்பலும் இடம் பெற்றது.

4-வது அலங்கார ஊர்தியில்,
பெரியார், ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், இரட்டைமலை சீனிவாசன், வ.வே.சு.அய்யர், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், காமராஜர், காயிதே மில்லத், ஜோசப் சி குமரப்பா ஆகிய தலைவர்களை சித்தரிக்கும் சிலைகள் இடம் பெற்றன.

இவ்வாறு, தமிழரின் பெருமையை பறைசாற்றும் வகையில் அலங்கார ஊர்திகள் அலங்கரிக்கப்பட்டு அணிவகுக்கப்பட்டன.
டெல்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்புக்காக தயாரிக்கப்பட்ட தமிழகத்தின் ஒரு ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்த ஊர்தியை திரும்ப சென்னைக்கு கொண்டு வந்த தமிழக அரசு, நான்கு ஊர்திகளாக உருவாக்கி சென்னை கடற்கரை சாலையில் வலம் வரவைத்தது.
இந்த ஊர்திகள் தமிழகம் முழுவதும் இன்று முதல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அந்த நிகழ்வை இன்று பிற்பகல் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்தி மூன்று ஊர்திகளாக பிரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. முதல் ஊர்தியில் வீரமங்கை வேலுநாச்சியாரின் சிலையும், மகாகவி பாரதியாரின் சிலை இன்னொரு ஊர்தியிலும், வஉசி சிதம்பரனார் உள்ளிட்ட தலைவர்கள் அடங்கிய மூன்றாவது ஊர்தியும் முதல்வரால் கொடியசைத்து மாநிலம் தழுவிய பயணத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.