ஈழத்தின் பிற்போர்கால வாழ்வின் ஒரு பகுதியை அப்படியே பதிவு செய்திருக்கிறது இந்தப் படம்.
கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட பெருநிலத்தில் அவற்றை அகற்றும் பணியினைச் செய்கிறார்கள் ஈழத் தமிழர்கள். ஒரு அமைப்பின் கீழ் செயல்படும் அக்குழுவின் செயல்பாடுகளை வைத்துத் துவங்கும் இக்கதை மெல்ல மெல்ல இலங்கை யுத்தத்தின் பாதிப்புகளை எல்லா கோணத்திலும் பேச முயன்றிருக்கிறது.
கதையும் களமும் அதில் நடித்திருக்கும் பெரும்பாலன மனிதர்களும் போரின் வடுக்களைச் சுமந்தவர்கள். மலைமகள் பாத்திரமும் அந்த குழந்தையும் இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது. மன்மதன் பாஸ்கி முதல் அனைவருமே நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

திரைக்கதையும் காட்சிப்படுத்தலும் இன்னும் செம்மையாக்கியிருந்தால் உலகத்தின் முக்கியமான சினிமாக்களோடு வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். ஆனாலும் படம் பதிவு செய்திருக்கும் அந்த மண்ணின் வாழ்க்கை சிறுசிறு குறைகளை படம் பார்ககும் போது உணராத வகையில் பார்வையாளனைக் கட்டிப் போட்டிருக்கிறது. சிவசாந்த குமாரின் ஒளிப்பதிவும், சிந்தக ஜெயக்கொடியின் பின்னணி இசையும் ஒலியமைப்பும் காட்சிகளும் யதார்தத்தின் பிரதிபலிப்பாக உள்ளன.
இது விமர்சிக்க வேண்டிய படமல்ல. பிற்போர்காலக் களத்தை அந்த மண்ணிலேயே சரியான காலத்தில் பதிவு செய்த இயக்குநருக்கு வாழ்த்துகள்.