ஈரோட்டில் பெரிய கல்வித் தந்தை தியாகராஜன் நடத்தும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருக்கிறார் ஆதி. நடுத்தர வர்க்க இளைஞன். அவர் ஜாதகத்தில் சில பிரச்சினை இருப்பதாக சோதிடர் கூறவே, கைக்கு அடக்கமான பிள்ளையாக வளர்க்கப்படுகிறார். உடன் பணியாற்றும் ஆங்கில ஆசிரியையுடன் காதல் வயப்படுகிறார். அதே நேரம் எதிர் வீட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை ஏற்பட, அவருக்கு உதவப் போகிறார். அதனால் அவருக்கு ஏற்படும் பிரச்சினைகள், அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் மையக் கதை.
துறுதுறுப்பான உடற்பயிற்சி ஆசிரியர் வேடம். ஆனால் ஆதி அதைச் செய்ய சற்றே மூச்சு வாங்குகிறார். சண்டைக் காட்சிகளில் அசத்துகிறார். ஆனால் உணர்ச்சிகளைக் காட்டுவதில் தடுமாறுகிறார்.
வில்லனாக வரும் தியாகராஜனின் நடிப்பு ஈர்க்கிறது. அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும்.
நாயகி காஷ்மீரா பர்தேசுக்கு பெரிதாக வேலை இல்லை.
ஆதியின் தாயாக வரும் தேவதர்ஷினி, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையாக வரும் இளவரசு, நாயகியின் தந்தை பிரபு, மைக் டைசன் ரசிகராக வரும் ராஜா, சிறப்புத் தோற்றத்தில் வரும் கே பாக்யராஜ் என எல்லோருமே சிறப்பான பங்களிப்பைத் தர, நாயகியின் அம்மாவாக வரும் வினோதினி கத்தி கூப்பாடு போட்டு கடுப்பேற்றுகிறார்.
மாதேஷ் மண்ணிக்கதின் ஒளிப்பதிவு, ஹிப் ஹாப் ஆதியின் இசை இரண்டுமே படத்துக்கு பக்க பலம்.
நாயகனுக்குப் போட்டியாக டீச்சரை சிறுவன் காதலிப்பதாக வரும் காட்சிகள் எல்லாம் அபத்தம்.
திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம் இயக்குநர் கார்த்திக் வேணுகோபால்.