‘தவிர்த்திருக்கலாம்… அனுபவமே பாடம்!’ – ரஜினிகாந்த்

2

சென்னை: ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்துவரி விவகாரத்தில் நீதிமன்றம் போனதைத் தவிர்த்திருக்கலாம்… அனுபவமே பாடம் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி ரூ.6.5 லட்சத்தையும் இன்று அவர் செலுத்தினார்.

ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கான சொத்து வரி நோட்டீசை ரத்து செய்யக்கோரி ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று இவ்வழக்கு விசாரணையின்போது, ரஜினிகாந்த் தரப்புக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்ததையடுத்து, ரஜினிகாந்த் தனது மனுவை திரும்ப பெறுவதாக அறிவித்தார். இதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இது குறித்து சமூக வலைத்தளமான டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், “நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும், தவறை தவிர்த்திருக்கலாம், அனுபவமே பாடம்,” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்துவரி ரூ.6.5 லட்சத்தை மாநகராட்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் செலுத்தினார். சொத்து வரி செலுத்த இன்றுடன் கெடு முடிவடையும் நிலையில் ரஜினி தரப்பில் வரி முழுமையாகச் செலுத்தப்பட்டது.