சென்னை: கொரோனா பொது முடக்க காலத்தில் திறக்கவே இல்லாத தனது ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட 6.50 லட்சம் சொத்து வரியை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரை ஆண்டு காலத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த சொத்து வரிக்கு எதிரான இந்த வழக்கு, இன்று புதன்கிழமை நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது.

ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவில், தனது ஆலோசகர் விஜயன் சுப்பிரமணியன் மூலம், தனது திருமண மண்டபத்திற்கு தவறாமல் சொத்து வரி செலுத்தி வந்ததாகவும், இந்த வரி கடைசியாக பிப்ரவரி 14-ம் தேதியன்று செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கொரோனா தொற்றுநோய் பரவல் அதிகரித்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் பொது முடக்கத்தை அறிவித்தன. இதன் விளைவாக, ரஜினிகாந்தின் திருமண மண்டபம், மார்ச் 24-ம் தேதி முதல் யாருக்கும் வாடகைக்கு விடப்படவில்லை.

இந்த சூழலில், செப்டம்பர் 10-ஆம் தேதி மாநகராட்சியிடமிருந்து சொத்து வரி ரசீதை பெற்றார். ஏப்ரல் முதல் செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கு 6.50 லட்சம் சொத்து வரியாக செலுத்துமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

மார்ச் 24-ம் தேதிக்குப் பிறகு தனது திருமண மண்டபத்தில் அனைத்து முன்பதிவுகளையும் ரத்து செய்ததாகவும், அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின்படி பணத்தை திருப்பித் தந்ததாகவும் கூறிய நடிகர் ரஜினி, சொத்து வரி மீதான காலியிட நிவாரணத்திற்கு தனக்கு உரிமை உண்டு என்றார்.

1919-ஆம் ஆண்டு சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டத்தின் பிரிவு 105-ன் படி, 30 நாட்களுக்கு மேலாக வளாகம் காலியாக இருந்தால், வரி நிவாரணம் அளிக்க உதவுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக செப்டம்பர் 23-ம் தேதி மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், ஆனால் இன்றுவரை எந்த பதிலும் இல்லை என்றும் கூறினார் ரஜினி.

இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களுக்குள் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். அதோடு அபராதம் விதித்து, வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாகவும் நீதிபதி எச்சரித்தார். இதையடுத்து வழக்கை வாபஸ் வாங்குவதாக ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. எனவே தான் தொடர்ந்த வழக்கை ரஜினிகாந்த் வாபஸ் பெறுகிறார்.

நாளைக்குள் வரி கட்டணும் – மாநகராட்சி

இந்த நிலையில், நாளை அக்டோபர் 15-ம் தேதி இரவு 12 மணிக்குள் முழு சொத்து வரியையும் கட்டாவிட்டால்
2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ரஜினிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ராகவேந்திரா திருமண மண்டப விவகாரத்தில் ரஜினியை நீதிமன்றம் ஒரு பக்கம் எச்சரித்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சியும் கெடு விதித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *