திருவனந்தபுரம்: ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படித்து வந்த 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர். போர் இன்னும் முடிவடையாததால் அவர்கள் மீண்டும் நேரடி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஷிய தூதரக துணைத் தலைவர் ரோமன் பாபுஷ்கின், “படிப்பை பாதியில் விட்டு வெளியேறிய இந்திய மாணவர்களுக்கு, அவர்களின் முந்தைய கல்வி ஆண்டுகளை இழக்காமல், ரஷிய பல்கலைக் கழகங்களில் சேர்க்கை வழங்கப்படும். இதன் மூலம் கல்வியை விட்ட இடத்திலிருந்து அந்தந்த படிப்புகளை மாணவர்கள் தொடரலாம்,” என்றார்.
அப்போது பேசிய ரஷிய கூட்டமைப்பின் கெளரவ தூதரும், திருவனந்தபுரத்தில் உள்ள ரஷிய மாளிகை இயக்குநருமான ரதீஷ் சி நாயர் கூறுகையில், “மாணவர்கள் உக்ரைன் பல்கலைக்கழங்களில் கல்வி உதவித்தொகை பெற்றிருந்தால், ரஷிய பல்கலைக்கழகங்களிலும் இது ஏற்றுக்கொள்ளப்படலாம். இருப்பினும், உக்ரைனில் செலுத்தப்பட்ட கட்டணம் ரஷியாவில் போதுமானதாக இருக்காது. உக்ரைனில் இருந்து திரும்பிய கேரளா மாணவர்கள் தங்கள் மதிப்பெண்கள் மற்றும் பிற கல்வி சான்றிதழ்களுடன் இங்குள்ள ரஷ்ய மாளிகையைத் தொடர்பு கொள்ளலாம்,” என்றார்.