கிராக்பிரெய்ன் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாட் ரீச்சபிள் ( Not Reachable). இப்படம் ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக, ரசிகர்களை இருக்கை நுனியில் பரபர திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் பேசியதாவது:
“இந்த திரைப்படத்தை முதலில் பைலட் பிலிமாக எடுத்தோம். அதன் மூலம் தயாரிப்பாளருக்கு எனது மேக்கிங் பற்றி தெரியவந்தது. அவர் எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார். இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டை ஒரு விழாவாக எடுத்து செய்ததே பெரிய விஷயம், அதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இவ்வளவு குறுகிய காலத்தில் படத்தை முடிக்க எனது குழு தான் மிக முக்கிய காரணம். இப்படத்தின் இசையமைப்பாளருக்கு இது தான் முதல் படம், எதிர்காலத்தில் அவர் சிறந்த இசையமைப்பாளராக வருவார். படத்தில் அனைவரும் கடினமாக உழைத்துள்ளார்கள். நடிகர் விஷ்வா, சாய் தன்யா, சுபா அனைவருக்கும் நன்றி. கேமராமேன் மிகக்குறைந்த லைட்டை வைத்து அட்டகாசமாக நான் கேட்டதை எடுத்து தந்தார்.”
இசையமைப்பாளர் சரண் குமார் பேசுகையில், “எனது முதல் படத்திற்கு இப்படி ஒரு ஆடியோ வெளியீடு நடப்பது சந்தோசம், அதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி. முதலில் இந்த படத்திற்கு ஒரு பாடல் தான் இருந்தது, பின்னர் நாங்கள் கலந்துரையாடி படத்தை ரசிகர்களுடன் நெருக்கமாக கொண்டு போக மேலும் சில பாடல்களை இணைத்துள்ளோம். அதுபோக ஒரு பாடலை இன்னும் வெளியிடாமல் வைத்துள்ளோம். அந்த பாடல் படத்தின் கதையை முழுதாய் கூறும் படி இருக்கும்,” என்றார்.
தயாரிப்பாளர் கே ராஜன் பேசுகையில், “திறமைகளோடு வரும் புதியவர்கள் சினிமாவில் ஜெயிக்க வேண்டும். சினிமாவை இப்போது காப்பாற்றுபவர்கள் சின்ன பட தயாரிப்பாளர்கள் தான். பெரிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சினிமாவை வைத்து பிழைக்கிறார்கள் ஆனால் வாழ வைப்பதில்லை. பெரிய நடிகர்கள் இப்போதெல்லாம் ஷூட்டிங் வெளி மாநிலங்களில் வைக்கிறார்கள் இங்கிருப்பவர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ரஜினி சாரிடமே இதை மாற்ற நான் வேண்டுகோளாக வைத்தேன். இப்போது படம் எடுப்பது பிரச்சனை இல்லை அதை ரிலீஸ் செய்வது தான் கஷ்டம். மக்கள் பார்க்க தயாராக இருக்கிறார்கள் ஆனால் படத்தை ரிலீஸ் பண்ண முடிவதில்லை. பல சின்ன படங்கள் தான் தமிழ் சினிமாவை வாழவைத்திருக்கிறது. சிக்கனமாக செலவு செய்து படம் எடுங்கள், சினிமாவில் பணம் போட்டால் பணம் திரும்பி வருவதில்லை. நாட் ரீச்சபிள் மக்களை ரீச் செய்யும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.
மேலும் நடிகர்கள் விஷ்வா, கார்த்திக், பிரவீன், நடிகை சுபா, இயக்குநர் அருண்காந்த் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
இந்தப் படத்தில் விஷ்வா, சாய் தன்யா, சுபா தேவராஜ், விஜயன், காதல் சரவணன், பிர்லா போஸ், ஷர்மிளா, கலங்கல் தினேஷ் நடித்துள்ளனர். சுகுமாறன் சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். எழுத்து, எடிட்டிங், இயக்கம் சந்துரு முருகானந்தம்.