ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்தார் எடப்பாடி!

1

சென்னை: சென்னை: ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவர் ஆதரவு பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது நேற்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் செல்லாது. ஜூலை 23 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடர வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். செய்தியாளர்களிடம் பேசும்போது, பழைய கசப்புகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமல்லாமல், சசிகலா, டிடிவி தினகரனுக்கும் அழைப்பு விடுத்தார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ் அழைப்புக்கு டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி நிராகரித்துவிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஓ.பன்னீர்செல்வம் இப்படித்தான் அடிக்கடி அழைப்பு கொடுப்பார், யாரை எதிர்த்து பதவி பெற்றரோ அவர்களை அழைப்பார். தர்மயுத்தம் போனதே சிலரை எதிர்த்துதான் அவர்களைதான் அழைக்கிறார். அவரிடம் நாங்கள் 15 நாட்கள் பேசினோம். அவரிடம் சமாதானம் பேசினோம். ஆனால் அவர் எதுவும் கேட்கவில்லை. தொண்டர்கள், நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அவரிடம் 15 நாட்கள் பேசினார்கள். அது எதற்கும் அவர் ஒத்துழைக்கவில்லை.

அவர் தன்னை பற்றி மட்டுமே நினைத்தார். கட்சியை பற்றிய நினைக்கவில்லை. மக்கள் ஆதரவு உள்ளவர்களுக்குத்தான் ஆதரவு இருக்கும்.ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு இருக்கிறதா? இருக்கிறது என்றால் பொதுக்குழுவிற்கு வாருங்கள். அவருடைய மகன் எம்.பி ஆகவும், மற்றொருவர் மத்திய மந்திரியாகவும் ஆகவேண்டும், வேறு யாரைப்பற்றியும் கவலையில்லை. எப்படி இணைய முடியும்? எந்த அடிப்படையில் இணைப்பு பத்தி பேசுகிறார்?” என்றார்.