உணர்வுகளை எழுத்தில் வடிக்கும் ஒரு எழுத்தாளனுக்கும், சிறைக்குள்ளிருக்கும் ஒரு கொலைகாரனுக்கும் இடையிலான உரையாடல்தான் இந்த பயமறியா பிரம்மை எனும் ஒன்றரை மணி நேரப் படம்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரான கபிலன், 25 ஆண்டுகளில் 96 பேரைக் கொலை செய்த சிறைக்கைதி ஜெகதீஷ் என்பவரின் வாழ்க்கையைக் கதையாக எழுத அவரை சிறையில் சந்திக்கிறார்.
அங்கே தன்னுடைய எழுத்துகளைப் படைப்புகள் எனக் கபிலன் சொல்ல, தன்னுடைய கொலைகளும் ஒருவிதத்தில் படைப்புகள்தான் என ஒவ்வொரு கொலைகளாக விளக்குகிறார் ஜெகதீஷ்.

அதை ஜெகதீஷின் முகத்தை வைத்து நேராகக் கதை சொல்லாமல், புத்தகத்தைப் படிக்கும் வாசகர்களின் முகத்தை வைத்துக் கதை சொன்னால் எப்படியிருக்கும் என்கிற வித்தியாசமான முயற்சிதான் ‘பயமறியா பிரம்மை’ படம்.
படத்தில் ஜெகதீஷ் எனும் பாத்திரம்தான் பிரதானம் என்றாலும், அந்தப் பாத்திரத்துடன் உரையாடும் எழுத்தாளராக வரும் வினோத சாகருக்கு படம் நெடுக வரும் வாய்ப்பு. ஆனால் அவருக்கு தரப்பட்ட வசனங்களில் அப்படியொரு செயற்கை.
ஜெகதீஷாக தங்களைக் கற்பனை செய்து கொல்பவர்களாக குரு சோமசுந்தரம், ஹரீஷ் உத்தமன், சாய் பிரியங்கா, ஜாக் ராபின் என நிறைய இருட்டு பிரேம்களில் நான்கைந்து பேர் வந்து போகிறார்கள்.
இசை அமைப்பாளர் கே வுக்கு ரொம்ப குறைச்சலான சம்பளம் போலிருக்கிறது. ஒற்றை வயலின் அல்லது கீ போர்டில் பின்னணியை ஒப்பேற்றி இருக்கிறார். ஒரு பாட்டு கேட்கும்படி உள்ளது.
நந்தாவின் ஒளிப்பதிவு படத்துக்கு ஒரு பீரியட் ஃபிலிம் உணர்வைத் தருகிறது.
திரைக்கதை ரொம்பவே குழப்புகிறது. எதற்காக 96 கொலைகள், அதற்கான காரணங்கள், எதற்காக அந்த விரிவான ரத்த ஓவியம் என்பதற்கெல்லாம் படத்தில் பதில் இல்லை.
ஒன்றரை மணி நேரப் படம்தான் என்றாலும், ‘விட்டால் போதும் ‘ என்ற உணர்வுதான் படம் முடியும்போது ஏற்படுகிறது!