பீகார்… 71 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்ட தேர்தல்!

2

பாட்னா: பீகாரில் 243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

முதல் கட்டமாக 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றி மக்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 71 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்கு பதிவில் முதல்வர் நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் உள்ள 6 அமைச்சர்கள் போட்டியிடுகின்றனர்.

மூன்று கட்ட வாக்கு பதிவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய அரசு 30 ஆயிரம் மத்திய பாதுகாப்பு படை வீரர்களைக் குவித்துள்ளது. மாவோயிஸ்டுகள் அதிகமுள்ள தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 80 வயது கடந்த மூத்த குடிமக்கள் அல்லது மாற்று திறனாளிகள் வாக்களிக்க வசதியாக தபால் ஓட்டு நடைமுறையும் உள்ளது.