சென்னை: சில வாரங்களுக்கு முன்பு கமல்ஹாசன் லேசான கொரோனா தொற்று பாதிப்பின் அறிகுறியால் சென்னை ராமச்சந்திரா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்ததால் லேசான பாதிப்பே இருந்தது.

மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் விரைவில் குணமடைந்து நோயின் தீவிரத் தன்மையிலிருந்து மீண்டு வந்தார். ஆனாலும் மருத்துவர்களின் ஆலோசனைபடி சில நாட்கள் கட்டாய ஓய்வில் இருந்து வந்தார்.

அவர் நடத்தி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்குப் பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். கமல் ஹாஸன் காணொலி மூலம் ரசிகர்கள் முன் தோன்றி உரையாடினார்.

இந்நிலையில் ஓய்வு முடிந்து முழுமையாக நலம் பெற்ற கமல்ஹாசன் இன்று (4-ந் தேதி) தன் வழக்கமான பணிகளைச் செய்ய மருத்துவர்களால் அனுமதிக்கப்பட்டார். அதன்படி இன்று மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டு பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் ஈவிபி அரங்கத்திற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.

முன்னதாக தனது ட்விட்டரில், ‘முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும்.

தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இன்று இரவு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாஸன் தோன்றும் விளம்பர வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *