விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியீட்டில் பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ‘எஃப் ஐ ஆர் (FIR)’. ராட்சசன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், இப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி, படத்தின் தயாரிப்பாளர், நடிகர் விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து பரிசளித்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ரைசா வில்சன் பேசுகையில், “இந்த கேரக்டரை நான் செய்வேனா என எல்லோரையும் போல எனக்கும் சந்தேகம் இருந்தது, ஆனால் மனு மட்டும் மிக நம்பிக்கையுடன் இருந்தார். விஷ்ணு விஷாலின் நம்பிக்கையும், அவரது தேர்வும் எனது மிகச்சிறந்த உழைப்பைத் தர, உந்தித் தள்ளியது. விஷ்ணு விஷால் இப்படத்தை செய்தே தீருவேன் என உறுதியாக இருந்தார். இந்த படத்தில் இரண்டு பேர் மட்டும் அந்தளவு நம்பிக்கையாக, உறுதியாக இருந்தார்கள். அப்படிப்பட்ட படம் கண்டிப்பாக தோற்காது. படத்தை பாராட்டிய அனைவருக்கும் நன்றி,” என்றார்.
இயக்குநர் மனு ஆனந்த் பேசுகையில், “இந்த படம் என்னால் பண்ண முடியும் என நம்பி வாய்ப்பு தந்த விஷ்ணு விஷால், தங்கதுரை சார் இருவருக்கும் நன்றி. இந்த கதையை என்னால் எடுக்க முடியாது என நான் நினைத்த போது, இவர்கள் என் மீது நிறைய நம்பிக்கை வைத்தார்கள். படக்குழு அனைவருக்கும் எனது கஷ்டங்கள் தெரியும், என்னை நம்பிய விஷ்ணு விஷால் மற்றும் என் குழுவினர் அனைவருக்கும் நன்றி,” என்றார்ே.
நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் பேசியதாவது:
“ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மீடியா தரும் ஆதரவை நான் என்றும் மறக்கவே மாட்டேன். விஷ்ணு விஷால் அடுத்த லெவலுக்கு போய்விட்டார் என எல்லோரும் பாராட்டியிருந்தார்கள், அதற்கு காரணம் மனு தான். உங்களுக்கும், மனுவுக்கும் நன்றி. நான் மனுவிடம் கதை கேட்ட போது ஃபேமிலிமேன், மாநாடு வந்திருக்கவில்லை. அது வந்த போது மனுவை அழைத்து பேசினேன், என்னிடம் அப்போது இரண்டு சாய்ஸ் இருந்தது, ஆனால் நான் துணிந்து தயாரித்தேன். ஏற்கனவே இப்படத்தை ஒரு தயாரிப்பாளர் மறுத்து விட்டபோது, மீண்டும் இப்படத்தை நிறுத்தினால் ஒரு டைரக்டருக்கு என்ன நடக்குமென எனக்கு தெரியும். அதனால் நான் இதை தயாரித்தே தீருவது என முடிவு செய்தேன்.
ராட்சசசனுக்கு பிறகு நடிகராக இது எனக்கு இராண்டாவது வாய்ப்பு, ஆனால் அதை வெற்றியாக சாதித்து காட்டிய மனுவுக்கு நன்றி. மைனா படத்தின் வெற்றி விழாவிற்கு போனபோது ரெட் ஜெயன்ட் மூவிஸ் எனது படம் பண்ணுவார்களா? என்ற ஆசை இருந்தது. நீர்ப்பறவை முதல் இப்போது வரை பெரிய ஆதரவு தந்துள்ளார்கள். ஷ்ரவந்தி ‘லைஃப் ஆஃப் பை’ ஹாலிவுட் பட நடிகை, என் படத்தில் எக்ஸிக்யூட்டிவ் புரடியூசராக பணியாற்றியுள்ளார். அவருக்கு நன்றி.
என் படத்தில் மூன்று நாயகிகள் நடித்துள்ளார்கள் ஆனால் ஒரு நிகழ்ச்சிக்கு கூட மூன்று பேரையும் என்னால் ஒன்றாக இணைக்க முடியவில்லை, அது ஒரு சின்ன கவலை. அப்புறம் உதய் அண்ணா, அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. குள்ள நரிக்கூட்டம் முதல் இப்போது வரை அவர் அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி. எல்லோரும் நான் சரியாக செக் எழுதிக்கொடுத்தேன் என்றார்கள், ஆனால் அதன் பின்னால் உள்ள கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும், இந்தப்படம் ஒரு கட்டத்தில் பெரிய பட்ஜெட்டாக வந்து நின்ற நேரத்தில், கடுமையான சிக்கல் உண்டானது. அப்பா வந்து கடன் வாங்காதே என்று அவரது பென்சன் பணத்தை தந்து உதவினார், அவருக்கு நன்றி.”
