சென்னை: ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவர் ஆதரவு பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது நேற்றைய தினம் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் செல்லாது. ஜூலை 23 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடர வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர் செல்வத்திடம் கட்சி இனி எப்படி செயல்பட போகிறது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தொண்டர்களின் ஆதரவோடும் தமிழக மக்களின் அரவணைப்போடும் நாங்கள் தொடர்ந்து நடத்துவோம் என்றார். எடப்பாடியோடு சேர்ந்து பணியாற்ற தயாரா என்ற கேள்விக்கு ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்னர் யார் எல்லாம் கட்சியில் பொறுப்பில் இருந்தார்களோ அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற தயார் என்றார்.
அதுபோல் இனி அவர் தரப்பு, இவர் தரப்பு என்றெல்லாம் இல்லை ஒருங்கிணைந்த அதிமுகதான் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:
“அம்மாவின் பிள்ளைகளான எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அசாதாரண சூழல் ஏற்பட்டது. அவைகளை எங்கள் மனதில் இருந்து அப்புறப்படுத்தி, மீண்டும் கழகம் ஒன்றிணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரை அவருக்கு தோல்வியே இல்லை. எதிர்க்கட்சியின் சதி வேலைகளை முறியடித்தவர் ஜெயலலிதா. 30 ஆண்டுகாலம் அதிமுகவை ஜெயலலிதா கட்டிக் காத்தார். ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் பயணித்தால் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது என்பதை பல தருணங்கள் நிரூபணம் ஆகியுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் பொறுப்பை ஏற்க வேண்டும், அதற்கு ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதது தான் எங்கள் நிலைப்பாடு.
கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். அ.திமு.க ஒன்று பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. 4 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது முழு ஒத்துழைப்பு வழங்கினோம், அந்தநிலை மீண்டும் தொடர வேண்டும். கசப்புகளை மறந்து விட்டு அ.தி.மு.க ஒன்றுபட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். கசப்புகளை மறந்துவிட்டு வாருங்கள். அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமியும் நானும் இணைந்து சிறப்பாக செயல்பட்டோம். இரட்டை தலைமை என்பதேல்லாம் பிரச்சினை இல்லை. கூட்டு தலைமையாக செயல்படுவோம்.
அதிமுகவுக்குள் எழுந்த பிளவு தான் திமுக ஆட்சிக்கு வர காரணம், இன்றைக்கு அதே சூழல்தான் ஏற்பட்டுள்ளது; இன்றைக்கு அசாதாரண சூழல் அதிமுகவில் ஏற்பட்டுள்ளது, அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே எண்ணம். நானும், எடப்பாடி பழனிசாமியும் சிறப்பாக கட்சி பணியாற்றினோம், கூட்டுத்தலைமைதான் அதிமுகவுக்கு சரியானது என உருவாக்கப்பட்டது.
டிடிவி தினகரனும், சின்னாம்மாவும் அதிமுகவில் இணைய வேண்டும்,” என அழைப்பு விடுத்தார். பேட்டியின் போது எடப்பாடி பழனிசாமி குறித்து குறிப்பிடும் போதெல்லாம் அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமி என்றே குறிப்பிட்டார்.