‘வள்ளி மயில்’ திரைப்பட டீசர்  வெளியீட்டு விழா!

ல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் ‘வள்ளிமயில்’. 80களின் நாடகக்கலை பின்னணியில் பரபரப்பான திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில், “நல்லுசாமி பிக்சர்ஸுடன் எனக்கு இது 4 வது படம். வள்ளி மயில் ஒரு க்ரைம் திரில்லராக ஆரம்பித்த படம். ஒரு வில்லனைப் பின்னணியாகக் கொண்டு கதை நடக்கும். பிரகாஷ்ராஜ் சார் மிரட்டியிருக்கிறார். இமானுடன் 7  வது படம், இன்னும் நிறையப் படங்கள் வேலை செய்வோம். விஜய் ஆண்டனியுடன், முதல் முறையாக வேலை செய்கிறேன். உங்கள் படம் சார் நீங்கள் சொல்வதை செய்கிறேன் என்று வந்தார், அவருக்கு நன்றி. வெண்ணிலா கபடிக் குழு படத்திற்குப் பிறகு நிறையக் கதாபாத்திரங்கள். சத்யராஜ் மிக முக்கியமான ரோல், அவரைச் சுற்றி 4 பேர் அதே போல், விஜய் ஆண்டனியை சுற்றி 4 பேர் எனப் பெரிய கூட்டம் படத்தில் இருக்கும். ஃபரியா அப்துல்லா மிக முக்கியமான ரோல், அற்புதமாக நடித்துள்ளார். மிகச் சிக்கலான கதை, அதை மிக எளிமையாகச் சொல்ல முயன்றுள்ளோம். எனக்காக இப்படத்தில் கடுமையாக உழைத்த தொழில் நுட்ப கலைஞர்களுக்கு நன்றிகள். இந்தப் படம் உருவாக்கியது மிக இனிமையான அனுபவம்.” என்றார்.

விஜய் ஆன்டனி

நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது: “இயக்குநர் சுசீந்திரனுடன் வேலை பார்த்தது மிக நல்ல அனுபவம். பிச்சைக்காரன் படமெடுக்கும் போது, இந்தப் படம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் நிகழ்ந்தது. இந்தப் படத்தில் இயக்கம் பற்றி நான் நிறையக் கற்றுக்கொண்டேன். சுசீந்திரனுக்கு நன்றி. சத்யராஜுடன் இணைந்து திரையில் நடிப்பது மிக மகிழ்ச்சி, அவருக்கு நான் ரசிகன். இமானுக்கும் ரசிகன். அவரது இசை குறித்து எனக்கு எப்போதும் ஆர்வம் இருக்கும். அவரது அப்பா எனக்கு நெருக்கம். அவரது வளர்ச்சி, மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் வித்தியாசமான படம். உங்களுக்குப் பிடிக்கும்,” என்றார்.

நடிகர் சத்யராஜ் பேசுகையில், “நாம் நடிக்கும் நிறைய படங்களில் நம் கொள்கைகள் பற்றி எல்லாம் பேச முடியாது. வேலை பார்க்க வந்துள்ளோம் அதை மட்டும் செய்ய வேண்டும் எனச் செய்துவிட்டுப் போவோம். ஆனால் இந்தப் படம் என் கொள்கைகள் பேச முடிந்த படமாக அமைந்தது மகிழ்ச்சி. சுசீந்திரன் ஒவ்வொரு படமும் வித்தியாசமாக எடுக்கிறார். இன்னொரு கதை வைத்துள்ளார், அது வந்தால் இன்னும் மிகப்பெரிய படமாக வரும். விஜய் ஆண்டனி மிகச்சிறந்த மனிதர், தனக்கு என்ன வரும் என்பதில் தெளிவானவர். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. வள்ளி மயில் எனப் பெண் கதாப்பாத்திர பெயரில் தலைப்பு வைத்ததற்கு மகிழ்ச்சி. அதற்கு ஒப்புக்கொண்ட விஜய் ஆண்டனிக்கு நன்றி.  இமான் பற்றி மிகச் சிறந்த விஷயங்கள் கேட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த ஒரு படத்திற்கு சம்பளமே வாங்காமல் இசையமைத்தார், உங்கள் மனதிற்கு நன்றி. ஃபரியா மிகச்சிறந்த நாயகி, எது சொன்னாலும் உடனே செய்வார். புதுமையான கதைக்களம். இப்படத்திற்காக உங்களைப்போல் நானும் காத்திருக்கிறேன்,” என்றார்.

மேலும் ஆடை வடிவமைப்பாளர் ராதிகா, பாடலாசிரியர் விவேகா, தயாரிப்பாளர் பிரவீன், சண்டை பயிற்சி இயக்குநர் ராஜசேகர், இசையமைப்பாளர் இமான் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பேசினர்.

இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்திற்கு பாஸ்கர் சக்தி வசனம் எழுதுகிறார். ஒளிப்பதிவு –  விஜய் சக்ரவர்த்தி, எடிட்டர் – ஆண்டனி, ஆர்ட் டைரக்டர் – உதயகுமார், மக்கள் தொடர்பு – சதீஷ் AIM.

படத்தில் அறந்தாங்கி நிஷா, கனி அகத்தியன், புஷ்பா புகழ் சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஜி பி முத்து, தயாளன்  உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

SuseendiranValli Mayil teaser launchசுசீந்திரன்வள்ளி மயில்
Comments (0)
Add Comment