சென்னை: ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் என திரையுலகின் முன்னணி நடிகர்கள் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கல்கியின் புகழ் பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இதில் முதல் பாகமான ‘பொன்னியின் செல்வன்-1’ வருகிற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏற்கெனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் இடம்பெறும் கதாப்பாத்திரத்தின் முதல் தோற்றங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியதேவனாக கார்த்தியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் படத்தில் தோன்றுகின்றனர். கல்கியின் உன்னதமான பாத்திரப் படைப்புகளுக்கு யார் பொருத்தமாக இருக்கிறார்கள் என ரசிகர்களிடையே விவாதம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன்-1 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் டீசர் வெளியாகியுள்ளது. தமிழில் சூர்யாவும், இந்தியில் அமிதாப் பச்சனும், மலையாளத்தில் மோகன் லாலும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டியும் டீசரை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள ட்வீட்:
பொன்னியின் செல்வன் சிறுமுன்னோட்டம் (தமிழ்):