கோவை நகரின் உதவி காவல் ஆணையர் விதார்த். ஒருநாள் இரவில் மழைகோட்டு அணிந்த மர்ம மனிதன் சாலையில் எதிர்ப்படுபவரை எல்லாம் கொடூரமாகத் தாக்கும் தகவல் விதார்துக்குக் கிடைக்க, அந்த மனிதனைப் பிடிக்கக் களமிறங்குகிறார். அந்த காரியத்தில் அவர் வென்றாரா என்பதுதான் படத்தின் ஒருவரிக் கதை. உள்ளே ஒரு பெரிய பிளாஷ்பேக்கும் உண்டு.
இரவு நேர கோவையின் காட்சி, ஒரு பெரிய சஸ்பென்ஸ் த்ரில்லருக்கான கோணங்கள், இசை என விறுவிறுப்பாகத்தான் ஆரம்பிக்கிறது படம். ஆனால் போகப் போக ஜவ்வாய் இழுத்து விடுகிறார் இயக்குநர். மழைக்கோட்டு மனிதன்தான் யாரெனத் தெரிந்துவிடுகிறதே… அதற்குப் பிறகும் எதற்காக அவ்வளவு நேரம் இழுக்க வேண்டும்?
விதார்த் நன்றாகவே நடித்திருந்தாலும், அந்தப் பாத்திரம் சற்றே சோர்வாகவே நடமாடுவதுபோல் தோன்றுகிறது. மஞ்சுவாக வரும் பெண்ணுக்கு பெரிய வேடம். இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம்
சில இடங்களில் ரொம்பவே முதிர்ச்சியாகத் தெரிகிறார். விதார்த் மனைவியாக வரும் டோரத்தி சற்றே எரிச்சலூட்டும் வேடம்.பிரவீனின் இசை, ஞானசவுந்தரின் ஒளிப்பதிவும் பலம்.
முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பும் சஸ்பென்சும் இரண்டாம் பாதியிலும் தொடராமல் போனதுதான் ஷாஜி சலீம் திரைக்கதையின் பலவீனம்.