சமீபத்தில் நடிகர் சிலம்பரசன் டி ஆரின் தந்தையும் பிரபல இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் உடல் நலம் குன்றிய நிலையில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை முடிந்த நிலையில், பூரணமாக குணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன் சென்னையில் டி.ராஜேந்தருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இதையடுத்து அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், அமெரிக்காவுக்கு டி.ராஜேந்தர் அழைத்து செல்லப்பட்டார். நடிகர் சிலம்பரசன் டி ஆர் தன்னுடைய பட வேலைகளை நிறுத்தி விட்டு, தன் தந்தையின் மேல் சிகிச்சைகான அனைத்துப் பணிகளையும் முன்னின்று செய்தார்.
அமெரிக்க மருத்துவமனையில் ராஜேந்தருக்கு மேல் சிகிச்சை தரப்பட்டது. சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது முழுமையாக டி.ராஜேந்தர் குணமடைந்துள்ளார். மருத்துவர்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டுமென அறிவுறுத்தியால், அமெரிக்காவிலேயே ஒரு மாதம் தங்கலாம் என குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர்.
சிகிச்சை முடியும் வரை உடனிருந்து, அனைத்து பணிகளையும் கவனித்துக்கொண்ட நடிகர் சிலம்பரசன் டி ஆர், தன் தந்தை ஒரு மாதம் வெளிநாட்டில் ஓய்வெடுப்பதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து விட்டு, தற்போது படப்பிடிப்பிற்காக சென்னை திரும்பியுள்ளார். உடல்நிலை குணமடைந்த நிலையில், தற்போது முழு ஓய்வெடுத்து வருகிறார் டி.ராஜேந்தர்.