அவந்திகாவின் பூர்வீகம் டெல்லி. பெங்களூருவில் தனது கல்வியை கற்ற இவர், நீலகண்டா இயக்கிய தெலுங்கு படமான மாயா மூலம் தனது திரையுலகப் பயணத்தை தொடங்கினார். பின்னர் இவர் தருண் ஷெட்டியுடன் இணைந்து
மீகு மீரே மாகு மேமே எனும் திரைப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்தார்.
வியாஷகம், மீகு மாத்திரமே செப்தா மற்றும் பீஷ்மா உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்த அவந்திகா, டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ஹரிஹரன் இயக்கத்தில் அஸ்வின்குமார் லட்சுமிகாந்தன் நடிக்கும் என்ன சொல்ல போகிறாய் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இது தவிர, நெஞ்சமெல்லாம் காதல் மற்றும் டி பிளாக் ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார். தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் இன்னும் சில திரைப்படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கி வரும் கல்லூரியை பின்னணியாகக் கொண்ட டி பிளாக் படத்தில் அருள்நிதியுடன் அவந்திகா நடித்து வருகிறார்.
தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் போது மொழிச் சிக்கலை எதிர்கொண்டாரா?
“கட்டாயமாக இல்லை. கலைக்கு மொழியும், எல்லைகளும் கிடையாது. ஒரு நடிகையாக மொழிக்கு அப்பாற்பட்டு ரசிகர்களை திருப்திப்படுத்துவதே எனது கடமை,” என்றார் அவந்திகா.