தமிழ் சினிமாவின் திசையை தீர்மானித்த எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமை கொண்ட ஆளுமை பஞ்சு அருணாச்சலம். அவரது 80 ஆண்டு விழா, இயக்குநர் இமயம் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா தலைமையில், தமிழ் திரையுலகின் எண்ணற்ற பிரபலங்கள் கலந்து கொள்ள, வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவினை பிஏ ஆர்ட் புரொடக்சன்ஸ் மற்றும் பிளாக் ஷீப் நிறுவனங்கள் இணைந்து ஆகஸ்ட் மாதம் நடத்தவுள்ளன.
இவ்விழாவிற்கு பத்திரிக்கையாளர்களை அழைக்கும் சந்திப்பில், திரைப்பிரபலங்கள் பாரதிராஜா, கலைப்புலி தாணு, கங்கை அமரன், சித்ரா லட்சுமணன், ஆர் கே செல்வமணி, அன்பு செழியன், காட்ரகடா பிரசாத், உட்பட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவிற்கான லோகோ ‘பஞ்சு 80’வை அறிமுகப்படுத்தினார்கள்.
அதனை தொடர்ந்து பத்திரிக்கை ஊடக நண்பர்களை பாராட்டும் வகையில், மூத்த பத்திரிக்கையாளர்கள் தேவி மணி, தேவராஜ், கலைப்பூங்கா ராவணன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இச்சந்திப்பில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசுகையில், “எதைச் செய்தாலும் அதில் வித்தியாசம் காட்டக்கூடியவர்கள் ஆர் ஜே விக்னேஷ், சுட்டி அரவிந்த். பிளாக்ஷீப்பின் கடுமையான உழைப்புதான் அவர்களது வளர்ச்சிக்கு காரணம். சோவின் நாடகங்கள் போல், இவர்கள் நாடகம் இருக்கும். திரையுலகில் பெரியளவில் பாராட்டுகளை பெறாத திறமைசாலி பஞ்சு அருணாச்சலம். அவருடன் நான் வெகுநாட்கள் பயணம் செய்து இருக்கிறேன். அவருக்கு இவ்வளவு நாட்கள் பாராட்டுகள் வழங்கப்படாதது வருத்தம். இப்போது இது நிகழவிருப்பது பெரிய சந்தோசம்,” என்றார்.
கலைப்புலி தாணு பேசுகையில், “50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் சாதனை படைத்தவர் சரித்திரம் படைத்தவர். எழுத்தால் தமிழ் சினிமாவில் எண்ணிலடங்கா வெற்றிகளை தந்தவர் பஞ்சு அருணாச்சலம் அவருக்கு நடைபெறும் இந்த பாராட்டு விழாவிற்கு நான் உறுதுணையாக இருப்பேன். எல்லோருக்கும் நன்றி,” என்றார்.
தென்னிந்திய வர்த்தக சபை சார்பில் காட்ரகடா பிரசாத் பேசுகையில், “பஞ்சு அருணாச்சலம் அவர்களை முதலில் எங்கள் சங்கத்தில் சந்தித்தேன், அதிலிருந்து 2016 வரை அவருடன் இருந்தேன். அவர் அவருடைய படங்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற நிறுவனங்களுக்கு கதை தந்தவர். எண்ணற்ற பாடல்கள் தந்தவர், படங்களைத் தந்தவர். அவர் சாதனைகளை இப்போதுள்ளவர்கள் எவரும் நினைத்து கூட பார்க்க முடியாது. இம்மாதிரி சாதனையாளர்களை இப்போதுள்ள தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அதனை பிஏ ஆர்ட் புரொடக்சன்ஸ் மற்றும் பிளாக் ஷீப் செய்வது மகிழ்ச்சி,” என்றார்.
இயக்குநர் சங்க தலைவர் ஆர் கே செல்வமணி பேசியது, “இங்கு வந்த பிறகு இரண்டு நிகழ்ச்சி நடப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கு கௌரவிக்கப்படும் பத்திரிக்கையாளர்கள் எனக்கு நெருக்கமானவர்கள். தேவராஜை நான் அறிமுகப்படுத்தியதை சொன்னார். இந்த மண்டபமே நன்றியால் நிறைந்த மண்டபமாக இருக்கிறது. ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் என ரஜினி சார் வாழ்வை மாற்றிய படங்களை தந்தவர் பஞ்சு சார், அதே போல் கமல் சாரை சகலவல்லவன் போன்ற படங்கள் மூலம் மாஸாக மாற்றியவர். அந்த காலத்தில் பஞ்சு சார் கதையென்றால் முன்னணி நட்சத்திரங்கள் கேள்வி கேட்காமல் நடிப்பார்கள். அவருக்கு விழா எடுப்பது எழுத்தாளர்களுக்கு எடுக்கும் விழா. அந்த விழாவில் அவரால் பயனடைந்தவர்கள் அனைவரும் பங்குகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் டிஜி தியாகராஜன் பேசியது, “பஞ்சு சார் எவ்வளவோ சாதனை படைத்திருக்கிறார் அவர் படங்களை திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறேன். அவருடன் சில காலம் பயணித்து இருக்கிறேன். அவர் பல ஜானர்களிலும் படம் தந்து சாதனை செய்துள்ளார். அவருக்கு இந்த விழா நடப்பதும் அதில் நானும் கலந்துகொள்ளவிருப்பதும் மகிழ்ச்சி,” என்றார்.
பாரதிராஜா – கங்கை அமரன்
இசையமைப்பாளர் இயக்குநர் கங்கை அமரன் பேசுகையில், “அண்ணன் பஞ்சு அருணாச்சலம் இல்லையென்றால் எங்கள் பரம்பரையே இல்லை. அவர் போட்ட பிள்ளையார் சுழிதான் எங்கள் வாழ்வை ஆரம்பித்து வைத்தது. அண்ணன் இருக்கும்போதே அவருக்கு விழா எடுக்க வேண்டும் என நினைத்தோம். இப்போது நடப்பது மகிழ்ச்சி. எங்கள் குடும்பத்தில் நடக்கும் விழாவில் பேசுவது போல் உள்ளது. இளையராஜா அண்ணனை தூக்கி விட்டது பஞ்சு அண்ணன்தான். அதே போல் என்னை வளர்த்து விட்டவர் பாரதிராஜா. அவருக்கு நன்றி. இந்த விழா நடக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என உறுதி கூறுகிறேன்,” என்றார்.
இயக்குனர் பாரதிராஜா பேசுகையில், “பஞ்சு ஒரு மென்மையான மனிதர். நான், இளையராஜா, கங்கை அமரன் அவரால் வளர்ந்தவர்கள். என்னுடைய அனைத்து படங்களையும் அவருக்கு போட்டுக்காட்டுவேன், அவர் பரிந்துரைகளை கேட்டு அதில் திருத்தங்கள் செய்வேன். அது படத்திற்கு பெரும் உதவியாய் இருக்கும். அவர் இல்லையென்றால் இளையராஜா தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்க மாட்டார். பஞ்சு அருணாச்சலம் உடைய பங்கு தமிழ் சினிமாவில் அதிகம். அவர் திறமையான எழுத்தாளர். அவருக்கு விழா எடுப்பது நமது கடமை. அவருடைய விழாவிற்கு தமிழ் திரையுலகம் முழுமையாக வர வேண்டும்,” என்றார்.