தேர்டு ஐ சினி கிரியேசன்ஸ் (3rd Eye Cine Creations) சார்பில் கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரகன்’. டிசம்பர் 1 திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது.
இந்நிகழ்வில் பங்கேற்ற படத்தின் தயாரிப்பாளர் நடிகர் கார்த்திகேயன் பேசுகையில், “சூரகன் டிரெய்லரை இந்தியாவின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகை மீடியா நண்பர்கள் முன் அறிமுகப்படுத்துவது எங்களுக்குப் பெருமை. இந்த படத்தில் வேலை பார்த்த அனைவரும் மிக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தனர். அச்சு ராஜாமணி அருமையான இசையை தந்துள்ளார். தியேட்டரில் கண்டிப்பாக இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். டிசம்பர் 1 திரையரங்குகளில் இப்படம் வருகிறது. உங்கள் ஆதரவை தாருங்கள்,” என்றார்.
படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள வின்சென்ட் அசோகன் பேசுகையில், “சூரகன் படத்தில் ஒரு வில்லன் ரோல் செஞ்சிருக்கேன்., இயக்குநர் கதை சொல்லும்போதே தெளிவாக இருந்தார். இப்போது வரும் இயக்குநர்கள் வில்லனுக்கும் அழுத்தமான கதாபாத்திரம் தருகிறார்கள். அந்த வகையில் இயக்குநர் சதீஷ் எனக்கு இந்த பாத்திரத்தை தந்ததற்கு நன்றி. அவர் க்ளீன் ஷேவ்தான் வேண்டும், நீங்கள் இப்படித் தான் இருக்கனும், என ஒவ்வொன்றிலும் தெளிவாக எல்லாம் சொல்லி நடிப்பை வாங்கினார். அது எனக்குப் பிடித்திருந்தது. ஹீரோ சண்டைக் காட்சிகள் செய்ததை பார்த்த போது, எனக்கு விஜயகாந்த் சார் ஞாபகம் வந்தது. ஹீரோ நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் பேசப்படும்,” என்றார்.
இயக்குநர் சதீஷ் கீதா குமார் பேசுகையில், “இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் அனைவரும் மிக கடுமையாக வேலை பார்த்திருக்கிறார்கள். இது ஒரு ஆக்சன் படம் மணிக்கு சிறப்பு தேங்ஸ். வழக்கமாக ஆக்சன் காட்சிகளை நானே வடிவமைப்பேன் ஆனால் அதையெல்லாம் திரையில் கொண்டு வர மணி மிக கடினமாக உழைத்துள்ளார். சஸ்பெண்டில் இருக்கும் காவல்துறை அதிகாரி, ரோட்டில் அடிபட்டு கிடக்கும் ஒரு பெண்ணை காப்பாற்ற முயல்கிறார், அதில் அவருக்கு வரும் பிரச்சனைகள் என்ன என்பது தான் படம். இந்த படத்தில் யாருக்கும் ஓய்வே தராமல் வேலை வாங்கியிருக்கிறேன். அதற்காக இப்போது நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கார்த்திகேயனும் நானும் நண்பர்கள். ரொம்ப காலமாக பேசித்தான் இந்தப்படத்தை உருவாக்கினோம். ஒரு ஆக்சன் படம் என்றாலும் கார்த்திகேயன் தற்காப்பு கலைகள் கற்றுக் கொண்டவர் என்பதால் ஈஸியாக இருந்தது,” என்றார்.
நிகழ்ச்சியில் கலை இயக்குநர் தினேஷ் மோகன், ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்சர் மண நடிகைகள் சுபிக்சா, தியா உள்பட பலரும் பேசினர்.