வன்னியர் சங்க மிரட்டல்… சூர்யாவுக்கு குவியும் ஆதரவு!

2

 

 

ஜெய் பீம் படம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் மிரட்டல் அறிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து பொதுவெளியில் சூர்யாவுக்கு பெரும் ஆதரவு குவிகிறது. வன்னியர் அமைப்புக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’.

படத்தின் கரு பலராலும் பேசப்பட்ட அதே சமயம், படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும் சர்ச்சையாயின. இதையடுத்து நடிகர் சூர்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் சிலர் கண்டம் தெரிவித்தனர். ஜெய்பீம் திரைப்படத்தில் குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்திருந்த பெயர் மற்றும் குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளம் இடம்பெற்றது போன்றவை தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தது. இதை தொடர்ந்து அந்த காட்சி நீக்கப்பட்டது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சூர்யாவுக்கு எதிராக அறிக்கை விடுத்தார். கேள்விகள் எழுப்பினார். பதிலுக்கு நெத்தியடியாக சூர்யாவும் பதிலளித்தார். ஆனாலும் வன்னியர் சங்கத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும், இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ‘படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும். 7 நாட்களுக்குள் 5 கோடி ரூபாய் அபராதம் வழங்க வேண்டும். வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும். 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும்’ என்று மனுதாரர் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குவியும் ஆதரவு

இந்த அறிக்கை வெளியானதிலிருந்து சூர்யாவுக்கு சமூக வலைத் தளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது. சூர்யாவுடன் துணை நிற்பதாகக் கூறி ‘WeStandWithSurya’ எனும் வாசகத்தை பதிவு செய்து வருகின்றனர். பொதுவெளியில் பலதரப்பட்ட மக்களும் சூர்யாவுக்கும் ஜெய் பீம் படத்துக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் பா ரஞ்சித், இயக்குநர்கள் வெற்றி மாறன், வெங்கட் பிரபு, மார்க்சிஸ்ட் கட்சியின் அருணன் போன்றோரும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.