அமெரிக்காவின் கொரோனா தடுப்புக் குழுவில் இடம்பெற்ற தமிழர்!

2

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், அங்கு தற்போதைய முக்கிய பிரச்சினையாக உள்ள கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக, கொரோனா தடுப்பு மற்றும் வழிகாட்டுதல் குழுவை அமைத்துள்ளார். 13 பேர் கொண்ட இந்தக் குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் விவேக் மூர்த்தி இடம் பிடித்துள்ளார்.

இதே குழுவில் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் மருத்துவரான செலின் ராஜ் இடம்பிடித்துள்ளார். ஈரோடு மாவட்டம் மொடக்க்குறிச்சியைச் சேர்ந்த ராஜ் நடராஜன் என்பவரின் மூத்த மகளான செலின் ராஜ், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். இவர் நியூயார்க் கிராஸ்மேன் மருத்துவக் கல்லுாரியில் உதவிப் பேராசிரியராகவும், அமெரிக்க நாட்டின் காசநோய் தடுப்பு பிரிவில், துணை இயக்குனராகவும் பணிபுரிகிறார்.

கடந்த 1998 முதல் 2012 வரை தென் ஆப்பிரிக்கா, மால்வாய், எத்தியோப்பியா, பிரேசில் போன்ற நாடுகளில் காசநோய், எச்.ஐ.வி., தொடர்பான மருத்துவ சேவை, ஆராய்ச்சி பணிகளை செலின் ராஜ் மேற்கொண்டுள்ளார். மேலும் நீலகிரி மலைவாழ் மக்களை பாதிக்கும் நோய்கள் குறித்தும் இவர் ஆய்வு செய்திருக்கிறார்.

இவர் தனது தந்தை பெயரிலான அறக்கட்டளை மூலமாக ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.