இயக்குநர் – நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் மரணம்

2

சென்னை: இயக்குநரும், நடிகருமான நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 57 இவரது மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்நீச்சல் தொடருக்கான டப்பிங் முடித்துவிட்டு வீடு திரும்பிய போது இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது. மாரிமுத்து மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வெள்ளித்திரையில் மட்டுமல்ல, தொலைக்காட்சி தொடர்களிலும் கலக்கி வந்த மாரிமுத்து இயக்குநர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். பின்னர் இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு ‘கண்ணும் கண்ணும்ய,’ 2014-ஆம் ஆண்டு ‘புலிவால்’ ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் கைக்கொடுக்காததையடுத்து நடிகராகக் களமிறங்கினார்.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம் செய்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் உப்புக் கருவாடு, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பாராட்டை பெற்றது.

அவர் நடிப்பில் ஒளிபரப்பாகிவரும் எதிர் நீச்சல் தொடர் மாரிமுத்துவுக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.

மாரிமுத்துவின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான தேனி பசுமலையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.