ஒரே மாதத்தில் 4 பள்ளி மாணவிகள் மரணம்… என்ன நடக்கிறது தமிழகத்தில்?

 

சென்னை: கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே பிளஸ் 2 படித்து வந்த மாணவி தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தமிழகத்தில் ஜூலை மாதத்தில் நடந்த 4-வது தற்கொலை சம்பவமாக பதிவாகியுள்ளது. இது குறித்து பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள் கல்வியை வியாபாரமாக இல்லாமல் சேவையாக செய்து மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

விருத்தாச்சலம் மாணவி

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே கடந்த திங்கள்கிழமை இரவு (ஜூலை 25) பிளஸ் 2 படித்து வந்த சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவி திங்கள் கிழமை தேர்வு எழுதிவிட்டு வந்ததாகவும், தேர்வு நன்றாக எழுதவில்லை என்பதால் மாணவி மன உளைச்சலில் இருந்தாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே மாணவி நீண்ட நேரமாகியும் தனது அறையை விட்டு வெளியே வராத நிலையில், பெற்றோர்கள் அறை கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக கடலூர் காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்தி கணேசன் கூறுகையில், செவ்வாய்க்கிழமை காலை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்து சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 174 (தற்கொலை குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க காவல்துறை) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

இந்த தற்கொலை சம்பவம் தமிழகத்தில் ஜூலை மாதம் நிகழும் 4-வது சம்பவமாகும். ஏற்கனவே ஜூலை 6 ஆம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்டார், அவர் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாணவி

அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 12-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாவட்டம் முழுவதும் போராட்டம் வெடித்தது.

ஒரு கட்டத்தில் இந்த போராட்டம் வன்துறையாக மாறிய நிலையில், போராட்டக்காரர்கள் தனியார் பள்ளியை சூறையாடினர், மேலும் மூத்த போலீஸ் அதிகாரிகள் உட்பட பலர் பலத்த காயமடைந்தனர்.

திருவள்ளூர் மாணவி

இந்த சம்பவத்தை தொடர்ந்து திருவள்ளுவர் அடுத்த மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழச்சேரி ஊராட்சி அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி பள்ளி விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படிக்கும் திருத்தணி தக்களூர் கிராமத்தை சேர்ந்த மாணவி சரளா, 17 நேற்று முன் தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி தற்கொலை சம்பவம், தமிழ்நாட்டை உலுக்கிய நிலையில், பிளஸ் 2 மாணவி சரளா விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி பள்ளி மாணவிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வது பெற்றோர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் வருத்தம் அளிப்பதாகவும், கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள் கல்வியை வணிகமாக கருதாமல் ஒரு சேவையாக கருதி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், “மாணவர்கள் கல்லூரிகளில் பட்டம் பெறுவதற்காக மட்டும் இல்லை. நீங்கள் (கல்வியாளர்கள்) அவர்களுக்கு தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் உறுதியைக் கொடுக்க வேண்டும். மாணவர்கள், குறிப்பாக, பெண்கள் பிரச்சனைகள், அவமானங்கள் மற்றும் பிற தடைகளை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் பெண்கள்) அறிவாற்றல் கூர்மையாக இருக்க வேண்டும்,

ஆனால் அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வலிமையானவர்களாக வளர வேண்டும் என்பதே எனது விருப்பம்,” என்று முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் மாணவிகள் உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ தொந்தரவு செய்தால், அரசு அமைதியாக இருக்காது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆனால் தமிழகத்தில் கல்விச் சூழல், குறிப்பாக தனியார் கல்வி நிறுவனங்களில் எப்படி இருக்கிறது? பணம், சுய நலம் மட்டுமே இந்த கல்வி நிறுவனங்களுக்கும் அவற்றை நடத்துபவர்களுக்கும் முதன்மையானதாக இருக்கிறது. மாணவர் நலன், அவர்களின் உளவியல் நெருக்கடிகள் குறித்தெல்லாம் பெரும்பாலான கல்வி நிலையங்கள் கவலைப்படுவதே இல்லை என்பதே சமூக செயல்பாட்டாளர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

வீட்டில் பெற்றோர் மீதான பயம், பள்ளிகளில் நிர்வாகங்கள் தரும் பலவிதமான நெருக்கடிகளைத் தாங்க முடியாத மாணவர்கள் இறுதி முடிவாக தற்கொலையை நாடுகிறார்கள். மாணவர்களின் உயிரைவிட படிப்பும் சான்றிதழ்களும் முக்கியமல்ல என்பதை பெற்றோர் மற்றும் கல்வி அமைப்புகள் புரிந்து கொள்ள வேண்டிய கட்டம் வந்துவிட்டது என்கின்றனர் சமூகவியலாளர்கள்.

School Students SuicidesTamil Naduதமிழ்நாடுதற்கொலைபள்ளி மாணவிகள்
Comments (0)
Add Comment