ஹர்திக் பாண்டியா அசத்தல்… ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கு முதல் வெற்றி!

 

துபாய்: பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை குரூப் போட்டி நேற்று துபாயில் நடந்தது. இப்போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது இந்திய அணி.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தார். துபாயில் நடக்கும் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இரண்டாவதாக பேட் செய்யும் அணி வெற்றி பெறுவதற்கு அதிக காரணங்கள் உள்ளதால் அப்போதே இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியது.

பாகிஸ்தான் அணியின் ஓப்பனர்களாக முகமது ரிஸ்வானும், அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமும் களம் இறங்கினார்கள். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் 3வது ஓவரில் புவனேஸ்வர் குமார் வீசிய பந்தில் அர்ஷ்தீப் சிங்கிடம் கேட்ச் குடுத்து அவுட் ஆனார்.

அடுத்ததாக களம் இறங்கிய பகர் ஸமான் 6வது ஓவரில் அவேஷ்கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய இப்திகார் அகமது, ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்து இருவரும் 45 பார்ட்னர்ஷிப் ரன்களை பாகிஸ்தானுக்காக சேர்த்தனர். அதன் பின் 13 வது ஓவரில் இப்திகாரின் விக்கெட்டை பாண்டியா வீழ்த்த அந்த கூட்டணி தகர்ந்தது.

அதன் பின் வந்தவர்கள் பெரிதாக ஆடாததால் பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் முடிவில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக அந்த அணியின் ரிஸ்வான் 43 ரன்கள் அடித்தார்.

அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணி 148 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் ஆடத்தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, கே எல் ராகுல் எதிர்பார்த்த அளவு ஆடவில்லை. கே எல் ராகுல் இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழந்தார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. அதன் பின் விராட் கோலி களம் இறங்கி ரோகித்துடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார்.

ரோகித் சர்மா 8வது ஓவரில் 12 ரன்களில் ஆட்டமிழக்க கோலியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார்.ஆனால் 10வது ஓவரில் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசியிருந்தார்.

அதன் பின் பொறுப்பாக சூர்ய குமார் யாதவ்வுடன் ஜோடி சேர்ந்த ரவிந்திர ஜடேஜா 19வது ஓவர் வரை நிலைத்து நின்றார். சூர்ய குமார் யாதவ் 18 ரன்களில் 15வது ஓவரில் வெளியேற, ஹர்த்திக்குடன் இணைந்தார் ஜடேஜா.

இந்த இணை பொறுப்பாக ஆடி 52 பார்ட்னர்ஷிப் ரன்களை சேர்த்தது. ஜடேஜா 20வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 35 ரன்களை அடித்தார். அதன் பின் களத்திலிருந்த ஹர்திக் பாண்டியா அசராமல் அதிரடியாக ஆடி இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தார். அவர் 17 பந்துகளில் 33 ரன்களை அடித்தார். வெற்றிக்கான 6 ரன்களை ஒரு சிக்சர் அடித்துப் பெற்றார் பாண்டியா. இதன் மூலம் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.

உறுதியுடனும் நம்பிக்கையுடனும் கடைசி வரை களத்தில் நின்று வெற்றி ரன்களை எடுத்த பாண்ட்யா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

Asia Cup 2022IndiaPakistanஆசிய கோப்பைஇந்தியா - பாகிஸ்தான்
Comments (0)
Add Comment