டெல்லி: இந்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடந்துவரும் விவசாயிகள், தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று ‘விவசாயிகள் நாடாளுமன்ற’ அமர்வை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஜந்தர் மந்தர் இந்திய நாடாளுமன்றத்தில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில்தான் அமைந்துள்ளது.
நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டம் நடந்து முடியும் வரை நாள்தோறும் இந்த போராட்டம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர், துணை சபாநாயகர், தேநீர் இடைவேளை என நாடாளுமன்ற அமர்வின் விதிகளே இங்கு பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இந்தப் போராட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது டெல்லி காவல் துறை.
இதனிடையே, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினர்.