ப்ளஸ் டூ தேர்வு ரத்து சரிதானா?

கொரோனா பரவல் காரணமாக, சிபிஎஸ்இ, பிளஸ் டூ பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நடத்திய காணொளி ஆலோசனைக்கூட்டத்தில் மூன்று மாநிலங்களைத் தவிர அனைத்து மாநிலங்களுமே தேர்வு நடத்த வேண்டும் என்றே சொன்னார்கள். ஆனால், தற்போது தேர்வை ரத்துச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். திடீரெனத் தேர்வை ரத்துச் செய்வது என்பது எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் செயலாகும் என்பது கல்வியாளர்கள் கருத்து. பிளஸ் டூ தேர்வு ரத்து தொடர்பாகப் பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளன.

சி.பி.எஸ்.இ என்றழைக்கப்படும் மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் பிளஸ் டூ படிப்பவர்களின் எண்ணிக்கை 12 லட்சம் மாணவர்கள் மட்டுமே. ஆனால், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுமார் இரண்டு கோடி மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் டூ தேர்வு எழுதுபவர்கள். எனவே தேர்வு ரத்து தொடர்பாக அதிகக் கவலைப்படவேண்டியது மாநில அரசுகளும், மாநில பாடத்திட்டங்களில் படித்தவர்களுமேயாகும்.

தேர்வு ரத்துச் செய்யப்பட்டாலும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படவேண்டும். மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் அவர்கள் தலைமையில், உயர்கல்வித் துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் கொண்ட ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது. இக்குழு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். இக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே, தமிழகத்திலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும் என்று அரசு தெரிவித்துள்ளது.

என்ன செய்திருக்கலாம்?

பிளஸ் 2 தேர்வை ரத்துச் செய்யாமல் அரசு சில நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம் என்று காந்திய மக்கள் இயக்கம் கருதுகிறது. இப்போது தேர்வுகள் ரத்து செய்திருப்பதன் மூலம் கல்லூரியில் நேரிடையான வகுப்புக்குச் செல்லப்போவதில்லை. மீண்டும் ஆன்லைன் வழியான வகுப்புக்குத்தான் செல்லப்போகிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசும், மாநில அரசுகளும் அவசரமாக முடிவெடுத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

பல கோடி பேர் வாக்களிக்கும் தேர்தலை எவ்வளவு திட்டமிட்டுப் பல கட்டங்களாக நடத்தினார்கள். மாணவர்களுக்கான தேர்வு விஷயத்திலும் இதுபோல் காலத்தை நிர்ணயித்து நடத்தி இருக்கலாம். நோய் தொற்றுக்காலத்தில் மாணவர்களின் உடல் நலம் மிக முக்கியமானது. ஆனால், தற்போது நோய்த் தொற்று குறைந்து வரும் வேளையில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தேர்வினை திட்டமிட்டு நடத்தியிருக்கலாம்.

தேர்வு மையம் என்பது அவர்கள் படிக்கும் பள்ளியில் மட்டுமல்லாது அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், மிகப் பெரிய திருமணக் கூடங்களில் கூடத் தேர்வு நடத்தியிருக்கலாம். மேலும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் உயர்கல்வியில் சேர்வதற்கான சேர்க்கையை நடத்துவதன் மூலம் மாணவர்களின் நலனும் பாதுகாக்கப்பட்டிருக்கும் என்பதே காந்திய மக்கள் இயக்கத்தின் நிலைப்பாடு ஆகும்.

இனி மாணவர்கள் பள்ளிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் நுழைவுத்தேர்வு பயிற்சிக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

எழும் கேள்வி

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொதுத்தேர்வை ரத்துச் செய்தாகச் சொல்லப்பட்டது. அதே நேரத்தில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு, பொறியியல் படிப்புக்கு ஜே.இ.இ. தேர்வு, சட்டப்படிப்புக்குத் தேசிய நுழைவுத்தேர்வு, மத்திய பல்கலைக்கழகங்களில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு என மத்திய கல்வி நிறுவனங்களில் சேர மட்டும் முப்பது நுழைவுத்தேர்வுகள் வரை நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வுகள் எல்லாம் நடத்தப்போகிறார்களா இல்லையா? அப்படியென்றால் எப்படி நடத்தப்போகிறார்கள் என்பதற்கான விளக்கம் இல்லை.

பொதுத்தேர்வை ரத்து செய்துவிட்டு நுழைவுத்தேர்வு நடத்துவது எந்தவகையில் நியாயம் என்று தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் இனி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் நுழைவுத்தேர்வு என மத்திய அரசு கொண்டு வருவதற்கு முயற்சியோ என்ற ஐயம் எழுகிறது. புதிய கல்விக்கொள்கையை முழுமையாக அமல்படுத்திட வாய்ப்புகளைத் தற்போதைய முடிவு அதிகப்படுத்தியுள்ளது எனக் கல்வியாளர்கள் கருதுவதை நிராகரிப்பதற்கில்லை.

என்ன செய்யவேண்டும்

சி.பி.எஸ்.இ தேர்வு ரத்து என்று அறிவிப்பு வெளியான உடனே தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவங்குவதற்கான பணிகள் ஆரம்பித்துவிட்டன. அரசு தொழில்நுட்ப கல்லூரிகளில், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறதோ இல்லையோ எதற்கும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்த்துவிடுவோம் என்பதே பெற்றோரின் மனநிலை. அதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் கல்லூரிகள் பணம் பண்ண ஆரம்பிக்கும்.

இந்த ஆண்டுத் தேர்வு ரத்து என்ற அறிவிப்பால் நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவர்களே அதிகளவில் பாதிக்க வாய்ப்புள்ளது. இவர்கள் ஏற்கெனவே கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தச் சூழலில் இவர்களின் பொருளாதார நிலையைக் கணக்கில் கொண்டு கல்லூரிச் சேர்க்கை விஷயத்திலும் மத்திய அரசும், மாநில அரசுகளும் கண்காணிக்க வேண்டியது அவசியம். அரசு கல்லூரிகளில் சேர்க்கை முடித்த பின்பே தனியார் கல்லூரிகளில் சேர்க்கை என அறிவிக்க வேண்டும்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆன்லைன் வழி கற்றல் முறை அதிகரித்து விட்டது. இதனை முழுமையான கல்வி என்று சொல்வதற்கில்லை. இந்தக் கல்விக்கு ஏன் முன்பு போல அதிகக் கட்டணம் வசூலிக்கிறார்கள் எனப் பெற்றோர்கள் யோசிக்கிறார்கள். இது குறித்தும் அரசுகள் சிந்திக்கவேண்டும்.

இந்த நேரத்தில் நாம் பல சுயநிதிக் கல்லூரிகளின் ஆசிரியர் நிலையையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. மாணவர்களிடம் முழுக் கல்விக் கட்டணத்தைப் பெற்ற பின்னும் ஆசிரியர்களுக்கு ஊதியம் தராமலும், சிலர் அரைகுறை ஊதியம் வழங்கியும் வருகின்றனர். இதனால் பல சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்களின் வாழ்க்கைக் கேள்விக் குறியாகியுள்ளது. அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, முறையான ஊதியத்தை அவர்கள் பெற வழிவகைச் செய்ய வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்துகிறது.

பிளஸ் டூ தேர்வு பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்தே பொறியியல், வேளாண்மை, கால்நடை அறிவியல், சட்டம், அறிவியல், கலை பிரிவுகளுக்கான படிப்புகளுக்குச் செல்கின்றனர். எனவே மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் விஷயத்தில் அரசு கவனமாக இருக்கவேண்டும்.

தேர்வினை ரத்துச் செய்து மாணவர்களைக் காப்பாற்றி விட்டோம் எனப் பெருமிதம் ஒருபுறம் இருந்தாலும் அவர்களின் எதிர்கால வாழ்வு குறித்தும் யோசிக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அதனை உணர்ந்து, மத்திய, மாநில அரசுகள் செயலாற்ற வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

– காந்திய மக்கள் இயக்கம்

Gandhiya Makkal IyakkamPlus two Examகாந்திய மக்கள் இயக்கம்ப்ளஸ் டூ தேர்வு
Comments (0)
Add Comment