டெல்லி: தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் மழை வெளுத்து வாங்கியது.
இந்த நிலையில், வங்கக்கடலில் வரும் 16ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அந்தமான் அருகே உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மிக கனமழையும், நாளை, நாளை மறுநாள் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதன் பிறகு தமிழகத்தில் மழை படிப்படியாகக் குறையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.