பிலடெல்பியா: அமெரிக்காவில் மினியாபோலிஸ் நகரில் கடந்த மே மாதம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் போலீசாரால் கொல்லப்பட்டார். அவர் கழுத்தில் டெரெக் என்ற வெள்ளை போலீஸ் அதிகாரி முழங்காலை வைத்து நெரித்துக் கொன்ற வீடியோ கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால், அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துக்கு நீதி கேட்டு எழுந்த போராட்டங்களால் பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸ் வன்முறை குறித்தும், கருப்பினத்தவர் மீது காட்டப்படும் பாகுபாடுகள் குறித்தும், இனவெறி குறித்தும் உலகளவில் விவாதங்கள் எழுந்தன.
இந்நிலையில், அமெரிக்காவில் மற்றொரு கருப்பினத்தவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பிலாடெல்பியா நகரில் 27 வயது கருப்பினத்தவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து அமெரிக்கா முழுவதும் கடும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்த போராட்டங்களால் 30 அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட நபரின் பெயர் வால்டர் வாலஸ் (Walter Wallace Jr.) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கையில் கத்தி வைத்திருந்ததாகவும், கத்தியை கீழே போடும்படி போலீஸார் தொடர் அழுத்தம் கொடுத்தபிறகு வால்டரின் தோளிலும், மார்பிலும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். உடனடியாக அவர் போலீஸ் வாகனத்தில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கே, வால்டர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.